குடிச்சிட்டு குண்டு வீசுனான்.. வெடிக்கலனு கதை சொல்லக்கூடாது.. ராஜ் பவன் சம்பவத்தில் எச்.ராஜா காட்டம்
சென்னை: குண்டு வெடிக்கவில்லை, குடித்துவிட்டு வீசிவிட்டான் என்று பேசாமல் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்ப முயன்ற கருக்கா வினோத்தை போலீசார், விரட்டிப் பிடித்து கைது செய்தனர். மேலும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீதுதான் பெட்ரோல் குண்டு விழுந்தது. பெட்ரோல் குண்டு வீச்சில் எந்த சேதமும் இல்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மதுபோதையில் இருந்துள்ளார் என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "இன்று ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிலும் ஆளுநர் மீது திமுகவினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனவே காவல்துறை குண்டு வெடிக்கவில்லை மாளிகை மீது படவில்லை, குடித்துவிட்டு வீசிவிட்டான் என்று பேசாமல் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில், "ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications