ஹெச்1என் 1,டெங்கு பரவல் தீவிரம்..காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் - மா.சுப்ரமணியன்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்புளுயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. காய்ச்சல் பாதித்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இந்த காய்ச்சல் பாதிப்பு கண்டவர்கள் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகி விடும். இந்த காய்ச்சல் குறித்து பயப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தீவிரமாக பரவி வரும் காய்ச்சல் காரணமாக பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்புளுவென்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேற்கண்ட அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மருத்துவ சிகிச்சை
லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் ஆசெல்டமிவிர் மற்றும் தேவைப்படும் மருந்துகளை வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகள் அனுமதி
13 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். பெரும்பாலோனோர் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 965 பேருக்கு என்1என்1 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவரும் நன்றாக இருக்கின்றனர். கடந்த ஜனவரி முதல் இதுவரை 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இன்புளுயன்சா பாதிப்பு
இன்புளுயன்சா காய்ச்சல் என்பது உடல் வலி, தலைவலி, காய்ச்சல், சளி தொந்தரவு கொண்டதாக இருக்கும். குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். இருமும் போதும் தும்மும் போதும் அது காய்ச்சல் பரவ வழி வகுக்கும். குழந்தைகளை பாதுகாப்பாக கவனிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. முக கவசம், தனி மனித இடை வெளி அவசியம்.

மாணவர்கள் மீது கவனம்
ஆசிரியர்களும் இது போன்ற பாதிப்புகளை மாணவர்களிடம் கண்டால் உடனே அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காய்ச்சல் பாதிப்பு கண்டவர்கள் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகி விடும். இந்த காய்ச்சல் குறித்து பயப்பட வேண்டாம். பாண்டிச்சேரி போல தமிழகத்தில் விடுமுறை விடும் அளவிற்காக சூழ்நிலை எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு
தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். சென்னையில் மட்டும் 117 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications