18 பேர்.. அந்த பொண்ணு "திலகவதி".. ஏன் சிரிக்கிறீங்க.. பொன்முடி சொன்ன பிளாஷ்பேக்.. நடுவே "மரகதம்" வேற
பொன்முடி தன்னுடைய கல்லூரி கால நினைவுகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்
சென்னை: எப்ப பார்த்தாலும், சீரியஸாகவும், பரபரப்பாகவும் காணப்படும் நம்ம தமிழக அமைச்சர்கள், இப்படியெல்லாம்கூட ஜாலியாக பேசுவார்களா? என்ற வியப்பிலேயே ஆழ்ந்து கிடக்கிறது திருச்சி மாநகரம்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், திமுக மூத்த அமைச்சர்கள் பொன்முடி, கேஎன் நேரு ஆகியோர் பங்கேற்றனர்.
கல்லூரி நிகழ்வு என்பதால், அமைச்சர்கள் 2 பேருமே தங்களது பள்ளி, கல்லூரி கால நிகழ்வுகளை அசைபோட்டனர்.. அதை மாணவர்களிடமும் பகிர்ந்து கொண்டனர்.
திமுக ஆட்சி.. உயர் மற்றும் ஆராய்ச்சி கல்வியின் பொற்காலம்.. ஜமால் முகமது கல்லூரியில் முதல்வர் பேச்சு
கேஎன் நேரு
நேரு பேசும்போது, ''நான் அந்தக் காலத்துலயே மோட்டார் சைக்கிளில் தான் காலேஜுக்கு வருவேன். இப்ப டான்னுன்னு ஒரு படம் பார்த்தேன். அதுல வர ஹீரோ மாதிரி தான் நான் இருப்பேன். கிளாஸ்ல எப்போதும் கடைசி பெஞ்ச் தான். எங்க குடும்பம் வசதி வாய்ப்புடன் இருந்தது.. அதனால், என் அப்பா என்னை படிக்க வேணாம்னு சொல்லி தொழிலை கவனிக்க சொல்லிட்டார். நான் படிக்காததால் நிறைய அவமானப்பட்டிருக்கேன். இப்போது தான் படிப்பின் அருமை தெரியுது.
இங்கிலீஸ்
''இப்படித்தான் ஒரு முறை கலைஞர், பொன்முடி, நான் 3 பேரும் ஒரு அதிகாரியை சந்தித்தோம். அவர் இங்கிலீஷ்ல தான் பேசுறாரு, அப்ப என்னால எதுவும் பதிலுக்கு பேச முடியல. பொன்முடி தான் அந்த இடத்தில் பேசினார்... அதனால் நீங்கள் எல்லாம் நல்லா படிங்க... திருச்சியை பொறுத்தவரை செயிண்ட் ஜோசப் கல்லூரி, நேஷனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, இந்த மூன்றும் தான் டாப். இதுல ஜோசப் காலேஜ்ல சேர்ந்தால் படித்து மாள முடியாது. படிபடின்னு சொல்வாங்க... ஜமால் முகமது கல்லூரியில் தான் ஜாலியாக இருக்கும். அதனால் தான் இதுக்கு பெயரே ஜாலி ஜமால் என்று பெயர் வந்தது.'' என்றார்.
பொன்முடி
அமைச்சர் பொன்முடி பேசியபோது, "நான் படிக்கிற காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகள் எல்லாம் கிடையாது. அரசுப் பள்ளிகள் மட்டும் தான்... அதுவும், நான் கடந்த, 1964ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்தபோது எனது வகுப்பில் மொத்தம், 18 பேர் தான்... இப்போது பிளஸ் டூ வகுப்பில், 200, 300 பேர் கூட இருக்கிறார்கள். அந்த, 18 பேரில் ஒரே ஒரு பெண் மட்டும் தான் படித்தார். அந்தப் பெண் பெயர் திலகவதி" என்றார்.
ஞாபகம் வந்த பெயர்
இதைக்கேட்டு அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.. கைகளை தட்டி சிரிப்பலையை படர விட்டனர்.. உடனே அமைச்சர் பொன்முடி, "எதுக்கு எல்லாம் கை தட்டுறீங்க? என் கூட படிச்சது ஒரே ஒரு பொண்ணு. அந்த பொண்ணு பேரு ஞாபகம் வந்தது, சொன்னேன்.. அந்த பேரை ஞாபகம் வச்சு சொல்றதுல என்ன தப்பு இருக்கு? அந்த பொண்ணும் வாத்தியார் வீட்டு பொண்ணுங்கிறதால அப்ப படிக்க வச்சாங்க.
காலேஜ் பீஸ்
நான் படிக்கிற காலத்துல உயர்கல்வி படிக்கிறது ரொம்ப கடினமான விஷயம். நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்தேன்... மாச மாசம் ஹாஸ்டலுக்கு கட்ட வேண்டிய பணம் எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் இது.. இப்ப மாதிரி, 2,000 ரூபாய், 3,000 இல்லை. வெறும், 70 ரூபாய் தான். ஆனால் அதை கட்டுவதற்கு அவ்வளவு சிரமமாக இருக்கும்... அந்த நாளுக்குள் பணத்தை கட்டவில்லை என்றால் மெஸ்ஸில் சாப்பாட்டை நிறுத்திடுவாங்க..
மரகதம்.. மரகதம்
அதனால, எங்க அப்பாவுக்கு லெட்டர் போடுவேன், "அப்பா எப்படியாச்சும், பீஸை சீக்கிரம் அனுப்பி வச்சுடுப்பா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பான்னு" எழுதுவேன்... அவர் என்ன செய்வாருன்னா, பீஸ் கட்டுவதற்கு, 2, 3 நாளுக்கு முன்னாடி, அல்வா வாங்கிட்டு வீட்டுக்கு போயிடுவாரு... அம்மா கிட்ட போய் அல்வாவை கொடுப்பாரு.. "மரகதம்... மரகதம்..." இதுதான் எங்க அம்மா பேரு. "உன் கழுத்துல இருக்கிற செயினை கொஞ்சம் கொடு... அடகு வச்சிட்டு சீக்கிரமா மீட்டு தந்துடுறேன்னு சொல்லி, அப்பா செயினை வாங்கிப்பார்.
ஹாஸ்டல் பீஸ்
நகையை அடகு வச்சு எனக்கு பணத்தை அனுப்பி விடுவாரு. அப்படியெல்லாம் நாங்கள் சிரமப்பட்டு படித்த காலம் போய், தற்போது இலவசமாக உயர்கல்வி தருகின்ற வாய்ப்பும், விடுதிக் கட்டணம் இல்லாமல் படிக்கின்ற வாய்ப்பையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது" என்றார்.. அல்வா வாங்கிட்டு அப்பா வீட்டுக்கு போவாரு என்று சொன்னதுமே மறுபடியும், கரகோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது.. இப்படியெல்லாம் மூத்த தலைவர்களின் பேச்சுக்களை கேட்பது இனிமையாகவும், புதுமையாகவும் இருக்கிறது..!