"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." சிந்து நதி ஒப்பந்தம்.. பாகிஸ்தானுக்கு இந்தியா சுளீர் பதிலடி
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்து இருந்தது. இதனால் அச்சத்தில் இருக்கும் பாகிஸ்தான், நீரை வாங்க ஏதேதோ செய்து வருகிறது. அதன்படி சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் முறையிட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக இந்தியா சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளது. சர்வதேச நீதிமன்றமே தலையிட்டாலும் கூட இந்தியா தனது நிலைப்பாட்டில் மிகத் தெளிவாகவே இருக்கிறது.
கடந்தாண்டு பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து என்னவெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியா ஒரு பக்கம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளைக் கொன்றது. மற்றொரு பக்கம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு விழுந்த மிகப் பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றம்
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் இந்தியா கட்டி வரும் கிஷன்கங்கா மற்றும் ரத்லே நீர்மின் திட்டங்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடியிருந்தது. கடந்த மே 15ம் தேதி இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்து இருந்தது.இதற்குத் தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்தீர் ஜெய்ஸ்வால், "சட்டவிரோதமாகக் கூட்டப்பட்ட இந்த நடுவர் நீதிமன்றத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை. எனவே, இதிலிருந்து வெளிவரும் எந்தவொரு தீர்ப்போ, உத்தரவோ இந்தியாவைக் கட்டுப்படுத்தாது.. அவை அனைத்தும் செல்லுபடியாகாது" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது தொடர்வதாகவும் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவு இன்னமும் தொடர்கிறது" என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டும் இதே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்திருந்த இந்தியா, "பாகிஸ்தானின் கட்டளைக்கு இணங்க நடத்தப்படும் ஒரு நாடகம் தான் இந்த நடுவர் நீதிமன்றம். ஒருபுறம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்துக்கொண்டு, மறுபுறம் பாகிஸ்தான் சர்வதேச அமைப்புகளைத் தனது சுயலாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்துகிறது" எனக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நிலைப்பாடு
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்து வருவதால் ரத்தமும் நீரும் ஒரே வழியில் பாயாது எனச் சொல்லி இந்தியா இந்த நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், 1960ல் போடப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதில் இந்தியா பிடிவாதமாக உள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
உலக வங்கியின் முன்னிலையில் 1960ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சிந்து நதி அமைப்பில் உள்ள 6 நதிகள் இரு நாடுகளுக்குப் பிரித்து வழங்கப்பட்டன.. கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய நதிகளின் முழுமையாக இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டது. மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் இவற்றின் நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி, மேற்கு நதிகளின் நீரை இந்தியா தனது உள்நாட்டுத் தேவை, விவசாயம் மற்றும் நீர்மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்திக் கொள்ள முழு அனுமதியுண்டு. ஆனால், இத்தனை ஆண்டுகளாகப் போதிய சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால், இந்தியா தனக்குரிய சட்டப்பூர்வமான முழுப் பங்கைப் பயன்படுத்தவில்லை. இதனால் அந்த நதிநீர் பாகிஸ்தானுக்குப் பாய்ந்து வந்தது. இப்போது காஷ்மீரில் இந்தியா நீர்மின் திட்டங்களைத் தொடங்கிய உடனே, பாகிஸ்தான் பதற்றமடைந்து சர்வதேச நீதிமன்றத்திற்கு ஓடியுள்ளது.












Click it and Unblock the Notifications