சூப்பர் நியூஸ்.. இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை மையம் தகவல்
அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், சமீபத்தில் வந்த அடுத்தடுத்த 2 புயல்கள் காரணமாக, நல்ல மழை கிடைத்தது.. பெரும்பாலான அணைகள் நிரம்பின.. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. இதனால் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஓரளவு நீர் கிடைத்தது.
அதற்கு பிறகு மழையே இல்லை.. அத்துடன் கடந்த 5 நாட்களுக்கு மேலாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.. இந்நிலையில்தான், வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்ககடல்
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் காற்றின் சுழற்சி நிலவி வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல சென்னை வானிலை ஆய்வு மையமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மறுபடியும் மழைக்கு வாய்ப்பு என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்கள்
அதனைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மிதமான மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இன்று லேசான மழையும், நாளை லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான மழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் எந்த பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்ல என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வடகிழக்கு பருவமழை தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 4 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது என்றாலும், கன்னியாகுமரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழைபெய்துள்ளது.












Click it and Unblock the Notifications