தரமற்ற விதைகளுக்கு டாட்டா.. தரமான விதைக்கு மத்திய அரசு சொல்லும் குட் நியூஸ்.. விவசாயிகளுக்கு ஹேப்பி
சென்னை: விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் விதைகள் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். தரமற்ற விதைகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்கவே கடுமையான பிரிவுகளுடன் புதிய சட்டத்தை அமல்படுத்தபோவதாகவும் மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை விவசாயமே முதுகெலும்பாகும்.. எனவேதான், விவசாயிகளின் நன்மைக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

முக்கியமாக, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்ற அசத்தல் திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசித்து வரும் கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு சபாஷ்
பிஎம் கிசான் திட்டத்தில் ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.
அதுபோலவே, விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை வேளாண்மைக்கான தேசியத் திட்டத்துக்காகவே நிதியும் வருடா வருடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
தரமான விதைகள்
இந்நிலையில், விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய மற்றொரு அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.. அதாவது, தரமான விதைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் விதைகள் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்திருக்கிறார்.
டெல்லியில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் 24 மாநிலங்கள் மற்றும் 140 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் பங்கேற்றன.. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பாரம்பரிய உற்பத்திப் பொருட்கள், இயற்கை வேளாண் பொருட்கள், பழ வகைகள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் போன்ற 267 தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
விவசாயிகள் நலனுக்காக புதிய சட்டம்
பிறகு, இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், "நாட்டில் 46 சதவீத மக்கள், தங்களின் வாழ்வாதாரத்துக்காக வேளாண் தொழிலையே சார்ந்துள்ளனர்.. எனவே விவசாயிகளுக்கு சிறந்த வருவாயை உறுதி செய்ய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது.
விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்... அதேபோல தரமற்ற விதைகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்கும் வகையில், கடுமையான பிரிவுகளுடன் புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது..
போலி விதைகள் தடுப்பு
அடுத்த வருட தொடக்கத்தில் நடைபெறஉள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.. போலியான விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், தரமான விதைகளை உறுதி செய்வதற்கான கட்டாய கண்காணிப்பு, சான்றிதழ், மற்றும் தர கட்டுப்பாட்டு விதிமுறைகளில் கவனம் செலுத்துவதாக இந்த சட்டம் இருக்கும்.
நாட்டில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அனுமதிக்கப்படாது. அதேசமயம் சிறந்த ரகங்களை உருவாக்கும் ஆய்வுகள் நடந்துவருகின்றன.. விளைச்சலை அதிகரிக்க ஒருங்கிணைந்த பண்ணை நடைமுறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன..
விவசாயிகளை உற்பத்தியாளர்களாகவும், தொழில்முனை வோராகவும், வர்த்தகர்களாகவும் உருவாக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அவைகள் மூலம் விவசாயிகள் நேரடியாகவே பயனடைய முடியும்..
வருவாய் அதிகரிப்பு
விவசாயிகளின் நலன் கருதி ஒருங்கிணைந்த வேளாண் நடைமுறைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்பட உள்ளன..
உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்பதன் மூலம் தற்சார்பு நிலையை எட்டுவதற்கும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் வேளாண் உற்பத்தி அமைப்புகள் உதவிட வேண்டும்..












Click it and Unblock the Notifications