பண மோசடி வழக்கு.. பெங்களூர் சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது.. தமிழக போலீசார் நடவடிக்கை!
பண மோசடி வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: பண மோசடி வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா தொழிலதிபர் ஒருவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் 22 மாதங்களுக்கு பின் தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குலம் அருகே உள்ள மேல இலந்தைக் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரி நாடார்.
காதில் ஒரு புளுடூத் ஹெட்செட்டும் நீண்ட தலைமுடியுடன் வலம் வரும் ஹரி நாடார் நடமாடும் நகைக்கடை போலவே இருப்பார். கழுத்தில் விதவிதமான நகைகளை அணிந்தபடி தென்படும் ஹரி நாடார் பனங்காட்டுப்படை என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

பனங்காட்டுப் படை கட்சி
கடந்த 2019 ஆம் ஆண்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற போது ஹரி நாடார் அங்கு பனங்காட்டுப் படை கட்சி சார்பாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஹரி நாடார் மூன்றாம் இடம் பிடித்தது கவனம் பெறும் வகையில் அமைந்தது. அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருந்தாலும் சுமார் 37 ஆயிரம் வாக்குகள் பெற்று கவனம் பெற்றார்.

ஹரி நாடார் கைது
ஹரி நாடார் மீது பல்வேறு மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் ஹரி நாடார் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கட்ராமன் என்பவரிடம் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ. 7 கோடி கடன் கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில் கர்நாடக போலீசாரால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹரி நாடார் கைது செய்யப்பட்டார்.

ரூ. 1.5 கோடி மோசடி செய்ததாக..
தற்போது பெங்களூரு பரப்பன அஹ்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடார் மீது மேலும் ஒரு வழக்கில் சென்னை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் பஷீர் மற்றும் குஜராத்தை சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் இன்று ஹரி நாடாரை கைது செய்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ. 1.5 கோடி மோசடி செய்ததாகவும் அந்த பணத்தை மீட்டுத்தருமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை
இந்த புகாரின் அடிப்படையில் ஹரி நாடாருக்கு எதிராக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஏற்கனவே மோசடி புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடாரை சென்னைக்கு அழைத்து வரும் பணியிலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications