பாமாயில் ரேசனில் வாங்கிட்டீங்களா? நாளை ரேஷன் கடைகள் இயங்கும்.. லீவு கிடையாது.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: ரேஷன் பொருட்களுக்கான விநியோகம் முழுமையாக நடைபெறாத நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன.. இவைகளுக்கு உணவு பொருட்கள் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

இந்த ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். இதைத்தவிர பண்டிகை காலங்களில், துவரம் பருப்பு, பாமாயில் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன..
ரேஷன் கார்டுகள்: தற்போது புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு ஏராளமானோர் காத்திருக்கிறார்கள். அதாவது, புதிய குடும்ப அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது...
கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியானது நிறுத்தப்பட்ட நிலையில், புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் நேற்றைய தினம் புதிய தகவலை வெளியிட்டிருந்தனர்.
புதிய அட்டைகள்: அதன்படி, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டதையடுத்து, ஏராளமான பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.
புதிய குடும்ப அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எனவே, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய குடும்ப அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்படும்... தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றபின் புதிதாக 2 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று உறுதி தந்துள்ளனர்.
உரிய பொருட்கள்: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.. இந்த மாதத்திற்கான கொள்முதல் தாமதமாகவே துவங்கியது.. இதன் காரணமாக, 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு உரிய பொருட்கள் இன்னும் கடைகளுக்கு முழுதுமாக அனுப்பப்படவில்லையாம்.. இதனால் பருப்பு, பாமாயில் வாங்காமலேயே நிறைய பேர் இருக்கிறார்களாம். எனவே, அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இதன்காரணமாக, நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறைக்கு பதில், பணி நாளாக அறிவித்து, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
அறிவிப்பு: இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர், கலெக்டர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "மே மாத சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களின் இயக்கத்தினை, உரிய காலத்திற்குள் முடிக்க, அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 26ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது; அதற்கு ஈடான விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, ரேஷன் பொருட்களை கடையில் இறக்கும் போது, ஒரு மூட்டைக்கு 2 - 3 கிலோ வரை குறைவாக இருப்பதாக, ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளதால், இதுகுறித்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாம். அதுமட்டுமல்ல, சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது ரேஷன் கடைகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், முறைகேடுகள் இதன்மூலம் தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications