கனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு
Recommended Video
சென்னை: கனிமொழி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த 17 வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன விட 3.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிகோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசிதழில் வெளியிடுமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு வாபஸ் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாக பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அனுமதியளித்தார். மேலும், வழக்கு வாபஸ் குறித்து தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் தமிழிசைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கனிமொழி புது வழக்கு:
இந்நிலையில், தூத்துக்குடி தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த வழக்கில் பதில் தருமாறு சந்தானகுமாருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.