மழையில் வழுக்கும் சென்னை வண்ணாரப்பேட்டை.. வெள்ளம் தேங்காமல் இருக்க என்ன செஞ்சீங்க? நீதிமன்றம் கேள்வி
சென்னை: வண்ணாரப் பேட்டையில், மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ரத்ன சபாபதி சாலையில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்குவதை எதிர்த்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜிஜி மாத்யூ என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், பழைய வண்ணாரப்பேட்டை ரத்தின சபாபதி சாலை பள்ளிக்கூடங்கள், மாணவர் விடுதி, மருத்துவமனை மற்றும் ஏரளமான குடியிருப்புகள் உள்ள பகுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் மழை நீர் தேங்குவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பல முறை மாநகராட்சிக்கு மனு அளித்தும் வடகிழக்கு பருவ மழையின் போது கடந்த 4 ஆண்டுகளாக மழை நீர் இப்பகுதிகளில் தொடர்ச்சியாக தேங்கியதால் பொதுமக்கள் பலர் அப்பகுதியில் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருவதாகவும், வீடுகளை இடித்து உயர்த்தி கட்டி வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பகுதியில் இருக்கும் ரெட்ட குழல் தெரு, டீ ஹெச் ரோடு பகுதியில் உள்ள மழை நீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் ஓடைகளை முறையாக பரமாரிக்காததே காரணம் என குறிப்பிட்ட அவர், இரத்தினசபாபதி சாலையில் உள்ள மழை நீர் வடிகால்களை சரி செய்து, பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை அகற்றி, மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், பழைய வண்ணாரப்பேட்டை இரத்தின சபாபதி சாலையில் இருந்து தேங்கும் மழை நீரை குழாய் மூலமாக நேரடியாக கடலில் சென்று கலக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அசோக், கடந்த சில வாரங்களுக்கு முன் மழை பெய்த போது எடுத்த புகைப்படங்களை தாக்கல் செய்தார். அதை பார்த்த நீதிபதிகள், மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ள நிலையில் மழை நீர் ஏன் தேங்குகிறது என கேள்வி எழுப்பினர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், பழைய வண்ணாரப்பேட்டையில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 14 ம் தேதி தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications