பென்சன்.. அதிகாரிக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் .. சாதித்த 97 வயது சுதந்திர போராட்ட வீரர்
சென்னை: 97 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, ஓய்வூதிய நிலுவையை பொது (அரசியல் ஓய்வூதியம்) துறை கூடுதல் செயலாளர் வழங்கவில்லை. இதையடுத்து அந்த அரசு அதிகாரிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்திருக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 97 வயதாகும் சுதந்திரப் போராட்ட வீரர் வேலு . இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு, தனக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், 1987-ல் அவர் விண்ணப்பித்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற போதும், 2008ஆம் ஆண்டு அளித்த ஒரு விண்ணப்பத்தை கருத்தில் கொண்டு, 2008 முதல் 2021 வரைக்கான ஓய்வூதிய பாக்கியை வழங்க வேண்டும் எனறு தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சுதந்திர போராட்ட வீரர் வேலு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கினார். ஆனாலும் ஓய்வூதிய பாக்கி தொகையை 97 வயதாகும் சுதந்திர போராட்ட வீரர் வேலுக்கு வழங்கப்படவில்லை.
இதையடுத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அனிதா சுமந்த், பொதுத்துறை கூடுதல் செயலாளர் அந்தோணிசாமிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூடுதல் செயலாளர் அந்தோணிசாமியை ஜூலை 8-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சென்னை காவல்துறை ஆணையருக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.
97 வயது சுதந்திரப் போராட்ட வீரர் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு துறையின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,












Click it and Unblock the Notifications