2 முறை கரண்ட் கட்! ஆதவ் அர்ஜுனா பேசும்போது சம்பவம்! திமுகவின் 30 ஆண்டு ஊழல் என விமர்சனம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியிருக்கும் நிலையில், மின்வெட்டு பிரச்சனை ஆட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென கரண்ட் கட் ஆனதால், அதிகாரிகள் ஷாக் ஆக.. இது குறித்து ஆதவ் விளக்கமளித்துள்ளார்.
பனையூரில், மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்வு இன்று நடைபெற்றது. வெவ்வேறு கட்சியிலிருந்து வந்தவர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், வெங்கட்ராமன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் வரவேற்றிருந்த நிலையில் திடீரென கரண்ட் கட் ஆனது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியிலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பவர் கட் குறித்து விளக்கமளித்துள்ளார்.

அவர் பேசியதாவது, "அதிமுகவிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் தொண்டர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர். 90%க்கும் அதிகமான அதிமுகவினர் வரும்போது நம்முடைய முக்கியமான குறிக்கோளாக இடைத்தேர்தல் மாறும். அதேபோல அடுத்து உள்ளாட்சி தேர்தலும் நம்முடைய வெற்றி குறிகோள்தான். இதில் நமக்கு உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமானது. ஆட்சி மாறிவிட்டது, ஆனால் காட்சி மாறவில்லை என்று நிறைய இடங்களில் சொல்கிறார்களே! இதை சரி செய்ய உள்ளாட்சியில் வெற்றி அவசியம்.
நாம் இங்கு உட்கார்ந்துக்கொண்டிருந்தபோது, 2 முறை மின்வெட்டு ஏற்பட்டது. உடனே பலரும், பாருங்க அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வில் 2 முறை கரண்ட் கட் ஆகிவிட்டது என்று கூறுவார்கள். ஆனால், 30 ஆண்டுகளின் நிர்வாக தோல்வி இது. நாங்கள் வந்து 30 நாட்கள்தான் ஆகிறது. மின்வாரிய துறைக்கு சென்று பார்த்தால், 50% ஆட்களே இல்லாத நிலை இருக்கிறது.
இது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் தெளிவாக விளக்கமளித்துள்ளார். என்னவெனில் துறையில் பணியாற்ற போதுமான ஆட்கள் இல்லை. 1 லட்சம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 50 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். திமுக நிர்வாகம் ஊழியர்களை பணியமர்த்தவில்லை. இன்னும் ஆயிரக்கணக்கான பேர் பணியில் அமர்த்தப்பட வேண்டும். நிறைய இடங்களில் ஆட்கள் இல்லை.
அறப்போர் இயக்கம், மிகப்பெரிய அளவில் மின்வாரிய ஊழலை வெளியில் கொண்டு வந்திருக்கிறது. நிலக்கரி கொள்முதல், மின்வாரிய உபகரணங்களில் ஊழல் நடந்திருக்கிறது. இப்படியாக மின்துறையை ஒழித்து, வெளியிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இவ்வளவு பெரிய பிரச்சனையை எப்படி ஒரே நாளில் சரி செய்ய முடியும்?
நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த தெருவில் டிரான்ஸ்பார்மர் பிரச்சனை. அதை அதிகாரிகள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே ஜெனரேட்டரில் மின்சாரம் வந்துக்கொண்டிருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
பவர் கட் பிரச்சனை, ஆட்சிக்கு தலைவலியை கொடுத்திருந்தாலும், மின்வெட்டுக்கு காரணம் நாங்கள் கிடையாது என்றும், முந்தைய ஆட்சியாளர்களின் தவறுதான் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்திருப்பது, விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications