தமிழகத்தில் வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல் என செய்தி! மறுப்பு வெளியிட நாளிதழுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்தி வெளியிட்ட இந்தி நாளிதழ் முதல் பக்கத்தில் மறுப்பை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து அதன் ஆசிரியருக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசியதற்காக கழுத்தறுத்து கொலை செய்யப்படுவதாகவும் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக போலி வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வந்தன. பீகார் மாநில பாஜக ட்விட்டர் பக்கத்தில் இந்த வதந்தி பகிரப்பட்டது.

இது வட மாநிலங்கள் முழுவதும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தின. பல முன்னணி வட இந்திய தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், இணைய ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் இதனை செய்தியாக வெளியிட்டன. ஆனால், தமிழ்நாடு காவல்துறை அப்போதே இதற்கு மறுப்பு தெரிவித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.
அப்போது தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i)(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் செண்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1)(b), 505(1)(c), 505(2) கீழ் பிரசாந்த் உம்ராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பெயரில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பிரபல இந்தி நாளிதழான டைனிக் பாஸ்கரின் இந்தி டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் பிரசூன் மிஸ்ரா முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதல் பக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து தாங்கள் வெளியிட்ட செய்தி உண்மையை கண்டறியாமல் வெளியிடப்பட்ட பொய் என்று மறுக்குமாறு உத்தரவிட்டு முன் ஜாமீன் வழங்கி உள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் இனி ஈடுபடக்கூடாது என்றும், அவர் தெரிவித்த நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்று அவருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்குவதாகவும் உத்தரவிட்டார். ஊடகம் என்பது ஜனநாயகத்தின் 4 வது தூண் எனவும், அதற்கு நிறைய பொறுப்புகள் இருப்பதாகவும் அதை உணர்ந்து செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.












Click it and Unblock the Notifications