முரசொலி பஞ்சமி நில வழக்கு.. பட்டியலின ஆணையம் விசாரிக்கலாமா? இன்று தீர்ப்பு வழங்கும் உயர்நீதிமன்றம்
சென்னை: முரசொலி நிலம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்து இருக்கிறது. 1825 சதுர அடி கொண்ட இந்த நிலம் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்படும் பஞ்சமி நிலம் என கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “மாதவன் நாயர் என்பவரிடமிருந்து முரசொலி சொத்து அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டு உள்ளது. கடந்த 1974 ஆம் ஆண்டில் இருந்தே முரசொலி அறக்கட்டளையின் வசமே அந்த நிலத்தின் உரிமை உள்ளது.” என்று குறிப்பிட்டு இருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையில் முரசொலி அறக்கட்டளை தரப்பு, “பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் சமயத்தில் பட்டியலின ஆணையம் தலையிட்டு தீர்வு காண முடியுமே தவிர உரிமையியல் வழக்கு விவகாரங்களில் நீதிமன்றங்களே தீர்வு காண முடியும்.” என தெரிவித்தது. பட்டியலின ஆணையமோ, “பஞ்சமி நிலம் குறித்த புகாரை விசாரிக்க வேண்டும் என்பதை அறிந்து விசாரணை மட்டுமே நடத்துவதாகவும், சொத்துக்கு யார் உரிமை என்பதை தீர்மானிக்கும் வகையில் நீதிமன்ற பணியை செய்யப்போவது இல்லை.” என தெரிவித்தது.
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருவாய் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சென்னை நுங்கம்பாக்கம் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 1952 ஆம் ஆண்டுக்கான ஆவணங்களின்படி அது பஞ்சமி நிலம் இல்லை என்றும் ரயத்துவாரி நிலம் என வகைபடுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 1912 ஆம் ஆண்டுக்கு முன் நிலம் யாருக்கு சொந்தம் என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, 50 ஆண்டுக்கான ஆவணங்கள் மட்டுமே இருப்பதாக கூறி வருவாய் துறை, மற்ற ஆவணங்கள் இல்லை என்றது.
அப்போது முரசொலி தரப்பு வழக்கறிஞர், பஞ்சமி நிலமாக இருந்தால் யாருடைய பெயருக்கும் பதிவுத்துறையில் பட்டா மாறுதல் பதிவு செய்ய முடியாது என்றும், சந்தேகமும் இல்லாத பட்சத்தில் பட்டாவை மட்டுமே மாறுதல் செய்ய அனுமதிக்கப்படும்.” என்றது.
பட்டியலின ஆணையமோ, “புகார்களை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. பட்டியலினத்தவர்களின் நலன் பாதிக்கப்படும்போது விசாரணை செய்வது இயல்பு. புகாரில் உண்மை இருந்தால் தொடர்ந்து விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்யும்.” என்றது. இறுதி விசாரணை முடிவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications