சிறை பறவையாகும் செந்தில் பாலாஜி.. ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து இருக்கிறது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி இவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு எதிராக 120 க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமலாக்கத் துறையினர் டிரங்கு பெட்டியில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அப்போது அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றமும் அக்டோபர் 19 ஆம் தேதி அதை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் 2 வது முறையாக செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தாா். மறுபக்கம் அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு, "அமலாக்கத்துறையின் ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் இருக்கின்றன. முன்னாள் அமைச்சருக்கு எதிரான 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. போக்குவரத்து துறையில் வேலை பெற்றுத் தருவதாக மோசடி செய்தார் என செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட 3 வழக்குகள் மட்டுமே உள்ளதாகவும், சுவரொட்டிகள் ஒட்டியது, முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடா்பாகவே மீதமுள்ள 6 வழக்குகள் உள்ளது.
வேலை பெற்று தருவதாக ரூ.67 கோடி வாங்கி மோசடி செய்ததாக அமலாக்கத் துறை தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை நடந்து முடிந்து விட்டது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்ட காலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்." என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ரூ.67 கோடி வசூலித்தது பற்றிய அனைத்து ஆதாரங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்களாகும்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்றாலும், எம்.எல்.ஏ.வாக உள்ளார். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் வராது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிப்ரவரி 21 ஆம் தேதி வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா். இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீா்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.












Click it and Unblock the Notifications