சென்னையில் அதிகரிக்கும் கொரோனா... புதிய கட்டுப்பாடுகள் அமல்? தீவிர ஆலோசனையில் அமைச்சர்...!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 332க உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 171 பேருக்கும், செங்கல்பட்டில் 66 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸிலிருந்து உருமாற்றமடைந்த பிஏ4 மற்றும் பிஏ5 என்ற புதிய வகை வைரஸ் பரவுவதே காரணம் என சுகாதாரத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குறையுது..கூடுது..ரிப்பீட்டு! இந்தியாவில் ஆட்டம் காட்டும் கொரோனா! இன்று திடீரென அதிகரித்த பாதிப்பு!
சென்னையில் கொரோனா
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 171 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,632 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 153 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி நடவடிக்கை
இதனிடையே கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பாக முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்காக, மெகா தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டது. முக்கியமாக இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
அமைச்சர் ஆலோசனை
இதனால் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அந்தக் கூட்டத்தில், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா அதிகரிக்கிறது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தினால் மற்ற பகுதிகளில் பரவாமல் இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் அமல்
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தினால், மற்ற மாவட்டங்களில் எளிதாக பார்த்துக் கொள்ள முடியும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் சென்னையில் மட்டும் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.