கருணையே காட்டாத சூரியன்.. சம்பவம் செய்யும் வெப்பம்.. எப்போது முடியும்! தப்பிக்க என்ன செய்ய வேண்டும்
சென்னை: தமிழ்நாடு தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகக் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சில நாட்களாகவே தொடர்ந்து வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தியாவில் கோடை காலத்தில் வெப்பம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். அதிலும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இதனால் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. மதிய நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர வேண்டாம் என்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைவாசிகள்: வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், சென்னைவாசிகள் கடும் அவதியைச் சந்தித்து வருகின்றனர். இருப்பினும், இன்னும் குறைந்தது சில நாட்களுக்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது சென்னைவாசிகள் இப்போதைக்கு வெயிலில் இருந்து விடுபட வாய்ப்பில்லை. நாளை வரை வெப்பம் 104 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைக் காட்டிலும் கூடுவதாகப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் வெப்பம் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

குறைந்தது நாளை வரையாவது வெப்பம் உச்சத்திலேயே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°C முதல் 41.5°C வரையிலும், தென் தமிழகத்தில் 33°C முதல் 40°C வரையிலும், மலைப் பகுதிகளில் 25°C முதல் 29°C வரையிலும் இருந்தது.
அதீத வெப்பம்: வேலூர், சென்னை பகுதிகளில் வெப்பம் தொடர்ந்து அதிகமாகியே வருகிறது. வெப்பம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் நிலையில், அதைச் சமாளிக்க வானிலை ஆய்வு மையம் சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

மதியம் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். தாகமாக இல்லையென்றாலும் போதுமான அளவு அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். இலகுரக, தளர்வான மற்றும் பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெயிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்பு கண்ணாடிகள், காலணிகள் பயன்படுத்தவும்.
வெப்பம் உச்சத்தில் இருக்கும் போது வெளியே செல்ல வேண்டாம். வெயில் இல்லாத நேரங்களில், உங்களுடன் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் வெளியில் செல்லும் போது தொப்பி, குடையைப் பயன்படுத்துங்கள்.. தலை, கழுத்து, முகம் மற்றும் கைகால்களில் ஈரமான துணியைப் பயன்படுத்துங்கள். பார்கிங் வாகனங்கள் அருகே செல்லப்பிராணிகளை விடாதீர்கள். மயக்கம் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களான லஸ்ஸி, எலுமிச்சை நீர், மோர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தவும்.. அவை உடலில் போதியளவில் நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் தண்ணீரைக் குடிப்பது போலவே உங்கள் செல்ல பிராணிகளுக்கும் தேவையான நீரைக் கொடுங்கள். வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.. இரவில் ஜன்னல்களைத் திறந்து ரூமை காற்றோட்டமாக வைத்திருங்கள். குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கவும்.
கடும் வெப்பத்தால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும். அவரை குளிர்ச்சியாக இருக்கும் இடத்தில் நிழலில் படுக்க வைக்க வேண்டும். ஈரத்துணியால் அவரது முகத்தைத் துடைக்கவும். அந்த நபருக்குக் குடிக்க ORS சத்தை கொடுக்கவும். உடனடியாக அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications