வெட்ட வெளிச்சமான குடுமிப்பிடி சண்டை.. அடித்துக் கொள்ளும் அதிமுக தலைகள்! எம்ஜிஆர் மாளிகையில் காக்கி!
சென்னை:தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு, தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திருப்பது அதிமுகவின் உட்கட்சி மோதல்தான். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தரப்பும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பும் நேரடியாக மோதும் நிலை உருவாகியுள்ளதால், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது நேற்று தமிழக அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக இருந்தது. அக்கட்சி சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெருங்கட்சியாக இருந்தது.

ஆனாலும், தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு அமைந்திருந்தது.
அதிமுக மோதல்
இந்த ஆதரவால் தவெக கூட்டணியின் பலம் 120 ஆக உயர்ந்திருந்தது.ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் அரசியல் சூழலை முழுவதுமாக மாற்றிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியிலிருந்து பிரிந்து செயல்பட்ட எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்தனர். இதுவே அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற பேச்சை உறுதிப்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி
சட்டசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் இந்த பிளவு தெளிவாகவே தெரிந்தது. எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதேநேரத்தில், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் சட்டசபையில் பெரும்பான்மை அதிமுக உறுப்பினர்கள் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.
எஸ்பி வேலுமணி
இந்த சூழ்நிலையில், கட்சியின் கொறடா உத்தரவை மீறி நடந்துகொண்டதாக கூறி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பை மறுத்த அவர்கள், "எங்களை எடப்பாடி பழனிசாமியால் நீக்க முடியாது. நாங்கள் இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறோம்" என்று பதிலடி கொடுத்தனர். இதனால் அதிமுக தலைமையகத்தில் இரு தரப்பினரும் திரளக்கூடும் என்ற தகவல் பரவியது.
எம்ஜிஆர் மாளிகை
இந்த தகவல் உளவுத்துறைக்கும் சென்றதையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். கட்சி அலுவலகம் முன்பு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய சாலைகளில் இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தற்காலிக சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்துக்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
கட்சித் தொண்டர்கள் அதிக அளவில் திரண்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால், காவல்துறை முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பது தற்போது தமிழக அரசியலின் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணி புதிய அதிகார மையமாக உருவெடுக்குமா? என்பது தான் தற்போது அதிமுகவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications