Heavy Rain: இன்று இரவு கனமழை விடாது.. 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை.. தென் மாவட்ட மக்கள் கவனம்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்துள்ளது. இன்று இரவு மட்டும் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை (Heavy Rain) வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று மாலையில் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. குமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பயங்கர இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

12 செமீ மழை பதிவு
குமரியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 12 செமீ மழை பதிவானது. தொடர்ந்து இன்று காலையிலும் ஒரு சில இடங்களில் மழை கொட்டியது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் பகல் நேரங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. மேலும் இன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையமும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் இன்று இரவு கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை மையம் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என கூறப்பட்டுள்ளது.
மேலும் இதனால் ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
இதனால் இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 15 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 16 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17, 17 ஆம் தேதி கனமழை
17 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் எப்படி?
சென்னையில் இன்று (12-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (13-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications