வைரல்! மந்தவெளியில் ஆர்டிஓ அலுவலகம் அருகே.. சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை: கனமழையால் மந்தவெளியில் ஆர்டிஓ அலுவலகம் அருகே சாலையில் திடீரென பெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டது. தார்ச்சாலை திடீரென உள்வாங்கியதில் ஒரு முழு வாகனமே மூழ்கும் அளவுக்குப் பள்ளம் ஏற்பட்டது.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.

கனமழை
குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட வடமாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதலே கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலம் இந்த கனமழைக்குக் காரணமாகக் கடந்த 2 நாட்களாகச் சென்னைக்கு ரெட் அலர்டும் கொடுக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஸ்ரீஹரி கோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கிறது.

கொட்டிய மழை
இந்த கனமழை காரணமாகச் சென்னை நகர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அசோக் நகர், தியாகராய நகர், கோடம்பாக்கம், நந்தனம், அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை என நகரின் பல்வேறு பகுதிகளிலும் நீர் தேங்கியுள்ளது. இத்தனை நாட்கள் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் வெள்ள நீரை வேகமாக வெளியேற்ற முடியா சூழல் ஏற்பட்டது. வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்,

மந்தவெளியில் திடீர் பள்ளம்
மேலும், இந்த மழையால் சென்னை சாலைகளில் ஆங்காங்கே ராட்சத பள்ளமும் ஏற்பட்டு வருகிறது. இன்று மதியம் மந்தவெளியில் ஆர்டிஓ அலுவலகம் அருகே சாலையில் திடீரென பெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டது. தார்ச்சாலை திடீரென உள்வாங்கியதில் ஒரு முழு வாகனமே மூழ்கும் அளவுக்குப் பள்ளம் ஏற்பட்டது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக யாரும் அந்த நேரத்தில் சாலையில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அதைச் சுற்றிலும் சாலை தடுப்பு வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.

அண்ணா சாலை விபத்து
முன்னதாக இம்மாத தொடக்கத்தில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா சாலையில் பள்ளம் காரணமாக இளைஞர் தடுக்கி விழுந்து பேருந்தில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சாலைகளில் இதுபோன்ற பள்ளங்கள் அடிக்கடி ஏற்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்












Click it and Unblock the Notifications