ஜில்லென்று விடிந்த காலை பொழுது.. பல ஊர்களில் மழை.. புதுக்கோட்டை, பள்ளி கல்லூரிகளுக்கு லீவு
சென்னை: சென்னை,மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. ஜில்லென்று விடிந்த காலை பொழுது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்னும் 2 வாரங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று கனமழை
நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் சாரல் மழை
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவில் இருந்தே சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது. இதேபோல் திருவண்ணாமலை உள்பட பிற மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்தது.

ஜில்லென்று விடிந்த காலை
மதுரை மாவட்டத்திலும் புற நகர் பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications