சுடும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே வெயில் சுட்டெரித்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இடியும் மின்னலுமாய் கொட்டித்தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
பல ஊர்களில் வெயில் சுட்டெரித்தது. கரூர் பரமத்தியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. திருச்சி, திருத்தணியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும், மதுரை, ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சாவூரில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலுடன் மழை
நாளைய தினம் தென்தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை மறுதினம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
25 மற்றும் 26ஆம் தேதியன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications