2வது நாளாக.. மீண்டும் களத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின்.. ராயபுரம், ஆர்கே நகர் என பல இடங்களில் ஆய்வு
சென்னை: சென்னையில் மழை பாதித்த இடங்களை முதல்வர் ஸ்டாலின் 2வது நாளாக பார்வையிட்டு வருகிறார். பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
நேற்று முதல்நாள் மாலையில் இருந்தே சென்னையில் கனமழை பெய்து வருகிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், தி நகர், போரூர், வளசரவாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை என்று சென்னையின் முக்கிய பகுதிகளில் எல்லாம் மிக தீவிர கனமழை பெய்து வருகிறது.
நேற்று முதல்நாள் மட்டும் 207 மிமீ மழையும் நேற்று 70 மிமீ மழையும் சென்னையில் பெய்து இருக்கிறது. இதனால் சென்னை சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

பார்வையிட்டார்
இதையடுத்து நேற்று வடசென்னையில் முதல்வர் ஸ்டாலின் மழை பாதித்த இடங்களை பார்வையிட்டார். நேற்று காலை 10.30 மணிக்கு களத்திற்கு சென்றவர் இரவு 7.30 மணி வரை 9 மணி நேரம் விடாமல் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். எழும்பூர், பாடி உள்ளிட்ட 11 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். வடசென்னைதான் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது.

ஆய்வு
இதனால் வடசென்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் சென்னையில் மழை பாதித்த இடங்களை முதல்வர் ஸ்டாலின் 2வது நாளாக பார்வையிட்டு வருகிறார். சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பின்வரும் இடங்களில் இன்று முதல்வர் நேரில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார். துறைமுகம் தொகுதியில் கல்யாணபுரம் கால்வாய், கல்யாணபுரம் மருத்துவ முகாம், வுட்வர்ப் வாயில் எண். 4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்.
Recommended Video

ஆய்வு
அதன்பின் ராயபுரம் தொகுதியில் பாரத் திரையரங்கம் ரவுண்டானா, மழைநீர் தேங்கிய பகுதி பார்வையிடுதல், உணவு மற்றும் நிவாரண உதவி வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் H6 காவல் நிலையம், உணவு மற்றும் நிவாரண உதவி வழங்குதல், தொப்பை விநாயகர் கோயில் தெரு, கால்வாய் பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்.

எங்கு?
பெரம்பூர் தொகுதியில் முல்லை நகர் பாலம், கால்வாய் பார்வையிடுதல், மகாகவி பாரதியார் நகர் (MKB Nagar), உணவு மற்றும் நிவாரண உதவி வழங்குதல் ஆகிய பணிகளை செய்கிறார். முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மட்டும் மேற்கொள்ளாமல் இன்றும் நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்க உள்ளார். உணவு பொட்டலங்கள், மாஸ்க், போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

அதிகாரிகள்
முதல்வர் ஸ்டாலினின் இன்றைய ஆய்வில் அமைச்சர் சேகர் பாபு, கே என் நேரு ஆகியோர் உடன் இருப்பார்கள். அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர், டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருப்பார்கள். அதேபோல் முதல்வர் செல்லும் மண்டலத்திற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும் உடன் இருப்பார்கள்.












Click it and Unblock the Notifications