சென்னையில் மீண்டும் கனமழை.. பல பகுதிகளில் விடாமல் பெய்கிறது.. வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம்!
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மேலும் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தெற்கு, வடக்கு என்று தமிழகம் முழுக்க பரவலாக இதனால் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. தூத்துக்குடியில் சில இடங்களில் இதனால் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

சென்னை
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்து லேசாக மழை பெய்த நிலையில் மாலையில் மழை தீவிரம் அடைந்தது. இதனால் சாலைகளில் மேலும் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கு
சென்னையில் இருக்கும் நுங்கம்பாக்கம், வடபழனி, முகப்பேர், தாம்பரம், கிண்டி, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தி நகர், திருவான்மியூர், அண்ணாசாலை, கோயம்பேடு, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

மழை நிலவரம்
சென்னையில் நாளையும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரங்களுக்கு சென்னையில் நல்ல மழை பெய்யும். அதன்பின் போக போக மழையின் அளவு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம்
சென்னையில் இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது ஏரியின் அளவு 22 அடியை எட்ட உள்ளது. 22 அடியை எட்டியதும் ஏரி திறக்கப்படும் என்பதால், அடையாறு ஆற்று பகுதியில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications