அடுத்த 2 மணி நேரம் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்து சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் பெருமழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 94 செ.மீட்டர் மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், முக்காணி, அகரம் உள்ளிட்ட பகுதிகள் பல நாட்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

வரலாறு காணாத இந்த மழை தென் மாவட்ட மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றது. தற்போது வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டும் வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் போக்குவரத்து இயல்பு நிலை திரும்பாமல் இருக்கிறது. வடகிழக்கு பருவமழை இந்த முறை சற்று அதிகமாகவே பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை சென்னை உள்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோவை, தேனி, நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதேபோல் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஆரச்ஞ் அலர்ட் விடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று வெளியிடப்பட்டுள்ள சென்னை வானிலை மைய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்தமிழக மாவட்டங்கள், வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
நாளை 8 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications