சென்னை குளிர்ந்தது.. இரவில் பெய்த கன மழையால் மக்கள் ஹேப்பி.. வெப்பம் குறைந்தது
சென்னை: சென்னையில் நேற்று இரவு பரவலாக பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வெப்பத்தில் சிக்கி தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவான்மியூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு மழை பெய்தது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் லேசான காற்றுடன் மழை பெய்தது.
பெரும்பாலான இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.

காட்டாற்று வெள்ளம்
இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கோவை மாவட்டத்தில் பில்லூர் அணை நிரம்பி பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இருபதடி உயர உயர்மட்ட பாலமும் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தை கடக்க ஆபத்தான முறையில் பரிசலில் பயணிக்கின்றனர்.

மகாராஷ்டிரா சாலைகள் முடக்கம்
இதேபோல மகாராஷ்டிராவில் கன மழை பெய்வதால், பெங்களூர்-மும்பை இடையேயான, தேசிய நெடுஞ்சாலை 4ல் சரக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக லாரி ஓட்டுநர்கள், நான்கு நாட்களாக உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

லாரி ஓட்டுநர்கள்
தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் பாலங்களுக்கு மேலே தண்ணீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மகாராஷ்டிரா எல்லையிலுள்ள சுங்கச்சாவடியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையில் காத்திருக்கின்றன.

அரசு உதவ கோரிக்கை
உணவுப் பொருட்கள் தீர்ந்து போனதாலும், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமலும் தவிக்கிறார்கள் லாரி ஓட்டுநர்கள். காட்டுப் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளதால் கடைகளுக்கு சென்று கூட உணவுகளை வாங்க முடியவில்லை என்று லாரி ஓட்டுநர்கள் கூறுகின்றனர். மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications