சென்னையில் கருமேகங்கள் சூழ.. திடீர் மழை.. குளிர்ந்தது தமிழகத்தின் தலைநகர்!
சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
கடந்த வாரம் மேற்கு திசை காற்று வேகமாக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 18ஆம் தேதி வரை தமிழகம். புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் காலை முதல் வெயில் குறைந்த அளவே காணப்பட்டது.
மாலை 4 மணிக்கு மேல் திநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அது போல் அண்ணா சாலையில் லேசான மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, சூளைமேடு, வடபழனி, எம்எம்டிஏ காலனி, அசோக்நகர், கே கே நகர், வில்லிவாக்கம், அண்ணாநகர், அயனாவரம், பசுமை வழி சாலை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் மழை பெய்கிறது. முகப்பேர், நொளம்பூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் மழை நீரே தேங்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications