கனமழை தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்தி வைப்பு...நவ.20 மாலை கூட்டத்தில் இனிப்பான முடிவு எடுக்கப்படுமா?
தமிழக அமைச்சரவைக்கூட்டம் வரும் நாளை நடக்கவிருந்த சூழலில் கனமழை ரெட் அலர்ட் காரணமாகவும், அமைச்சர்கள் மாவட்டங்களில் ஆய்வில் இருப்பதாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாலை கூட்டம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றப்பின் தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததை கட்டுப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டது. தமிழகத்தின் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததை மாற்றி தடுப்பூசியை அதிகப்படுத்தியதன் மூலம் முற்றிலும் கொரோனா பாதிப்பு குறைந்தது.

நிதி மேலாண்மை முக்கிய ஆலோசனை
இதுதவிர மாநில அளவில் கல்விப்பிரச்சினை, நீட் நுழைவுத்தேர்வு, நிவாரணம் வழங்குவது, அறநிலையத்துறை பிரச்சினை, மத்திய அரசிடம் நிதியைப்பெறுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள், ஜிஎஸ்டி பிரச்சினை என நிதித்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினை, தமிழக அரசின் முன் உள்ள திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என பல பிரச்சினைகள் பல்வேறு காலகட்டங்களில் அமைச்சரவை கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர் புற உள்ளாட்சி தேர்தல் முக்கிய அஜண்டா
தற்போது தமிழகத்தில் நகர் புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்புதல், உலக வங்கிக்கடன் பிரச்சினை, ஆசிய வங்கி கடன் பிரச்சினை, தமிழக அரசின் நிதி மேலாண்மை பிரச்சினைகள் குறித்து ஒப்புதல் வாங்கும் நிலையில் அமைச்சரவை கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் இருந்தது.

அமைச்சர்கள் ஆய்வால் ஒத்தி வைப்பு
இதுதவிர தற்போது தமிழகத்தில் மழைக்கால பேரிடர், கடந்த வாரம் பெய்த கனமழை பாதிப்பு, வடகிழக்கு பருவமழை முடியாத நிலையில் வரும் பாதிப்புகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளது. இந்நிலையில் மழைக்காரணமாக நாளை நடைபெறும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:
"தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை (19-11-2021) மாலை 5 மணியளவில் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதால், மேற்படி மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடத் தமிழக முதல்வர் ஸ்டாலின் பணித்துள்ளார்.
இதன் காரணமாக, நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, 20-11-2021 (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும்". இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

இனிப்பான முடிவு எடுக்கப்படுமா?
அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ளச் சேதம், நிவாரண நிதி குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியாக நிவாரண நிதி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications