சென்னையில் சுடும் சூரியன்..12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் அடி வெளுக்கப்போகுது கனமழை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சோலையாரில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. கோவில்பட்டி, ஓசூர், தாலுகா அலுவலகத்தில் தலா 2 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது, திண்டுக்கல்,கள்ளந்திரியில் தலா 1 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது.

இடி மின்னலுடன் கனமழை
மாலை நேரங்களில் பல ஊர்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் லேசான மழை
7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றைய தினம் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப்பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

பலத்த காற்று வீசும்
நாளைய தினம் தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப்பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சூறாவளி வீசும்
7 மற்றும் 8ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications