"எச்சரிக்கை".. தமிழ்நாட்டில் கனமழை தொடரும்.. இந்திய வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதனிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வாங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம்
இலங்கையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவ.9ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பின் 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடரும்
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள்
குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கண்காணிப்பு
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 48 மணி நேரத்தில் வலுவடைந்து, தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரவுள்ள நிலையில், உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications