சென்னை முதல் குமரி வரை.. வாட்டி வதைக்கும் கனமழை.. மருத்துவமனை, குடியிருப்பு என எங்கெங்கும் வெள்ளம்!
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே சென்னை, கன்னியாகுமரி மாவட்டத்தை மழை புரட்டி போட்டது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. விமான போக்குவரத்தும், மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கபட்டு பின்பு சீரடைந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.
ரூ.2.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு: வழிப்பறி என தாய் ஆடிய நாடகம் அம்பலம்: 2 பெண்கள் கைது
சென்னையில் வடியாத வெள்ளம்
சென்னையில் ஏற்கனவே கொட்டி தீர்த்த மழையினால் எற்பட்ட வெள்ளமே இன்னும் முழுமையாக வடியாத நிலையில் மீண்டும் நகரத்தின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது பொதுமக்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது. தியாராய நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தும், பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும் காணப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும் மழைநீர் தேங்கியுள்ளது. பல்வேறு சுரங்கபாதையும் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார் மூலம் மழைநீரை வெறியேற்றினாலும் மீண்டும் பெய்யும் மழையால் நீர் தேங்கி விடுகிறது.
நீரில் மிதக்கும் செங்கல்பட்டு
சென்னையின் புறநகர் மாவட்டமான செங்கல்பட்டில் பேய் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் செங்கல்பட்டு நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி நடக்கிறது. செங்கல்பட்டு-மதுராந்தகம் முக்கிய ஜிஎஸ்டி சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் கடைகள், வீடுகளுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது. இதேபோல் மாவட்டத்தின் படூர், கேளம்பாக்கம், நாவலூர், செம்மேஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் ஆறு வெள்ளம் போல் ஓடிக்கொண்டு இருக்கிறது. திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து இ.சி.ஆர் செல்லும் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது.
மருத்துவமனையில் புகுந்த மழைநீர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவமனைக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளை அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருந்த செவிலியர்கள், டாக்டர்களும் வெளியேற்றப்பட்டனர். பூந்தமல்லி அம்மன் கோவில் தெருவில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகம் மற்றும் அங்கு அமைந்துள்ள பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முழங்கால் அளவு மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது
நாகை, கடலூர், விழுப்புரம்
கடலூர் மாவட்டத்திலும் பலத்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தும், சிற்றாறுகளில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து தனித்தீவுகளாக மாறி இருக்கின்றன. தொடர் கனமழையால் நாகை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் இதுவரை வெள்ளத்தில் மூழ்கி நாசமாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் உப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொட்டிய வரலாறு காணாத மழை காரணமாக ஏற்கனவே தேங்கிய மழைநீரே வடியாத நிலையில் மீண்டும் பல்வேறு பகுதிகளில் மழைபெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பல இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வரும் மழையால் தாமிபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நெல்லை டவுண், பேட்டை, பாளையஙகோட்டை பகுதிதிகளிலும் மழைநீர் சாலைகளில் தேங்கி இருக்கிறது.
தென்காசி, குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்
தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. அந்த பகுதியில் உள்ள கோவில், கடைகள், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் அதிக அளவுக்கு விழுந்து ஒரே அருவிபோல் காட்சியளிக்கிறது. பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நடைபாதையிலும் தண்ணீர் ஓடுகிறது.
குமரியில் மீண்டும் சோகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த பேய் மழையில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் குமரி மாவட்டத்தில் கன மழை கொட்டி தீர்த்தது. கமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை காரணமாக பேச்சிப்பாறை, சிற்றார், பெருஞ்சாணி போன்ற பிரதான அணைகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் கோதையார் , தாமிரபரணி ஆறுகளின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நெய்யார் இடதுகரை கால்வாய்யை ஒட்டிய மீனச்சல் கிராமத்தில் தண்ணீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கால்வாய் கரையோரம் உள்ள மூன்று வீடுகள் இடிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. 25-க்கும் மேற்பட்ட வீடுகள் எந்த நேரமும் இடியும் அபாய நிலையில் உள்ளன. கிராமத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிந்தது நூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.