நகரவே முடியல.. பயங்கர டிராஃபிக்! பரனூர் டோல்கேட், தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
சென்னை: சென்னைக்கு படையெடுத்து வரும் மக்களால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னைக்கு அதிக அளவிலான மக்கள் செல்வதால், வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து வருகின்றன.
சென்னையில் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்களிலும், பண்டிகை காலங்களின் போதும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. வார இறுதி நாட்களில் சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதன் காரணமாக முக்கிய சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதேபோல விடுமுறை முடிந்து ஞாயிறு அன்று சென்னை நோக்கி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வருவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, சென்னை நகருக்கு வெளியே புறநகரில் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. எனினும், கிளாம்பாக்கத்திற்கு ரயில் வசதி இல்லாததால் இப்போதும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தி, வெள்ளிக்கிழமையும், இன்றும் சுப முகூர்த்த நாட்கள் ஆகியவற்றை ஒட்டி, சென்னையில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் சென்றிருந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அவர்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் குறிப்பாக கார், அரசு பேருந்து, ஆம்னி பேருந்து, ஆட்டோ, வேன்கள் சென்னை நோக்கி வருவதால் 30 நிமிடங்களுக்கு மேலாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலால் பரனூர் முதல் புலிப்பாக்கம் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்க்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பரனூர் சுங்கச்சாவடி நிர்வாகம் வழக்கமாக ஆறு பூத்களில் வாகனங்களை அனுப்பி வைத்து வந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதலாக ஒரு பூத் திறக்கப்பட்டு மொத்தம் ஏழு பூத்களில் வாகனங்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.
அதேபோல, சென்னை தாம்பரம் பகுதியில் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சில கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பண்டிகை முடிந்து ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதால், போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன.












Click it and Unblock the Notifications