தமிழ்நாடு அரசின் நிவாரணம்.. இலங்கைக்கு இன்று செல்லும் "ராட்சச ஷிப்".. கப்பலை வழியனுப்பும் முதல்வர்!
சென்னை: தமிழ்நாடு அரசின் நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கை செல்கிறது. நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படுகிறது. கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்று இருக்கிறார். ஆனால் இன்னும் அங்கு பொருளாதாரம் சீரடையவில்லை. முக்கியமான எரிபொருள் கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல் இருப்பு 1 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இதனால் தற்போது இலங்கையில் அந்நாட்டு அரசின் விமான சேவையை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூடுதலாக நோட்டுகள் அச்சடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை
இதனால் அங்கு வரும் நாட்களில் மேலும் இலங்கை ரூபாய் மதிப்பு சரியும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் மூலம் தமிழ்நாடு அரசு சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி வருகிறது.

பொருளாதாரம்
முதலில் தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்காமல் இருந்தது. இதன்பின்னர் தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை வழியாக இலங்கைக்கு உதவிகளை அனுப்ப மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும், மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கியும் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது.

தமிழ்நாடு அரசு உதவி
முதல் கட்டமாக இலங்கைக்கு ஏற்கனவே மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இன்று இரண்டாவது கட்டமாக தமிழ்நாடு அரசின் நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கை செல்கிறது. நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படுகிறது. கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார். நிவாரண பொருட்கள் பாக்ஸுகளில் வைக்கப்பட்டுக் கொண்டுசெல்லப்படுகிறது.

எவ்வளவு மதிப்பு
மொத்தம் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 500 டன் பால் பவுடர் இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. 80 ரூபாய் மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. அத்தியாவசியமான மருந்துகள் 137 வகை, இன்று அனுப்பப்பட உள்ளது. இதன் மதிப்பு 28 கோடி ரூபாய் ஆகும். இதில் முதல் கட்டமாக ஏற்கனவே உதவி நிவாரண பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் இன்னும் மீதி பாதி உதவி நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளன. வரும் நாட்களில் அடுத்த கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்படும்.

என்ன கப்பல்?
கப்பலில் இருக்கும் இடத்தை பொறுத்து இந்த நிவாரண பொருட்கள் படிப்படியாக அனுப்பப்பட உள்ளது. 'டான் பின்-99' கப்பல் மூலம் இந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. இலங்கை செல்லும் நிவாரண பைகளில் "தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்" மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்என வாசகம் இடம் பெற்றுள்ளது. வெள்ளை மூட்டைகளில் தமிழ்நாடு அரசின் இலட்சினையும், மத்திய அரசின் இலட்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications