எம்மாடியோவ்.. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் இரு நாட்களில் வசூல் ஜோர்.. மதுரைக்கு முதலிடம்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் இரு நாட்களில் மது விற்பனை ரூ 294 கோடிக்கு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக டாஸ்மாக் மதுபான கடைகள் கொரோனா லாக்டவுனால் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை கொடுத்தது.
அதன்படி சமூகவிலகலை கடைப்பிடித்து மதுபானக் கடைகளை திறந்து கொள்ளலாம் என அறிவுறுத்தியது. இதையடுத்து டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சண்டீகர் உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை ஜரூராக நடந்தது.

தயார் நிலை
அந்த வகையில் தமிழகத்திலும் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. எனினும் கடந்த 7-ஆம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடைகள் திறப்பதற்கு முன்னர் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வண்ணம் மரக்கட்டைகள் கட்டப்பட்டன.

விற்பனை
அன்று காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே காலை 6 மணிக்கெல்லாம் குடிமகன்கள் வரிசைகளில் காத்திருந்தனர். சென்னையில் கடைகள் திறக்கப்படாமலேயே தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் முன்பு கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மற்ற மாநிலங்களை விஞ்சும் அளவுக்கு விற்பனை நடந்திருக்கும் என கணிக்கப்பட்டது.

இரண்டாவது நாள் வசூல்
அதன்படி கடந்த இரு தினங்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ 294 கோடி வருமானம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் அதாவது கடை திறப்பின் முதல் நாள் அன்று ரூ 172 கோடிக்கு விற்பனையானது. நேற்றைய தினம் ரூ 122 கோடி கல்லா கட்டியது.

ரூ. 32 கோடி விற்பனை
தமிழகத்தில் மது விற்பனையில் மதுரை முதலிடம் பிடித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ 32.45 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. சென்னையிலும் அதனை சுற்றியுள்ள மற்ற மாவட்ட எல்லைகளிலும் கடைகள் திறக்கப்படவில்லை. சுமார் 1700 கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் இந்த விற்பனை பெரிய அளவில் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications