அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றலைன்னா அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை.. ஐகோர்ட் உத்தரவு!
மதுரை: சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாலைகளில் பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் கடமை என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகளை அகற்ற உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில் "சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் கடமை. சட்டவிரோத பேனர்கள், அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும்.
அகற்றத் தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிடலாம் என கருதினோம். இருந்தபோதிலும் அதை தவிர்க்கிறோம்.
இந்த விவகாரத்தில் கடமை தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல் நடவடிக்கையை உயர் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தனர்.
மேலும், சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்றிவிட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications