மாசாணி அம்மன் கோயில் ரூ.100 கோடி நிதி விவகாரம்.. அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 100 கோடி நிதியைப் பயன்படுத்த முடிவெடுப்பதற்கு முன்பு சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயில் தக்காராக ராஜ்குமார் என்பவரை நியமித்து அறநிலையத்துறை கடந்த ஜனவரி 14 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்தும் கோயில் நிரந்தர வைப்பு நிதியாக உள்ள ரூ. 100 கோடியை பயன்படுத்த தடை கோரியும் கூடுவாஞ்சேரி நந்திவரத்தைச் சேர்ந்த பி.பாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஜெகன்நாத், அறங்காவலர்களை நியமிப்பது தாமதமாகி வருகிறது. அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றாமல் கோயிலுக்குச் சொந்தமான நிரந்தர வைப்பு நிதி ரூ.100 கோடியை கையாளக் கூடாது என உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையும் நடந்து வருகிறது. வைப்பு நிதியை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஓராண்டாக இந்த கோயிலுக்கு அறங்காவலர்களை நியமிப்பதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பினர்.
பின்னர் அறங்காவலர்கள் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும், கோயில் நிரந்தர வைப்பு நிதியை பயன்படுத்தும் முன்பாக சட்ட விதிகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications