"தினமும் 20 மாத்திரைகள் போடுகிறேன்”.. வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரிய மீரா மிதுன் மனு தள்ளுபடி!
சென்னை: "தினமும் 20 மாத்திரைகள் எடுத்து வருவதால், உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டு, தன் மீதான எஸ்.டி, எஸ்.சி, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரி மீரா மிதுன் மனு தாக்கல் செய்தார். விசாரணை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மாடலிங் பெண்ணான மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் மீது கடுமையான விமர்சனங்களைச் சொல்லி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
பேட்டி ஒன்றில் பட்டியலின மக்களை குறிப்பிட்டு மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் மீரா மிதுன். பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள், அப்படி இருப்பதால்தான் அவர்களை அனைவரும் விமர்சிக்கிறார்கள். இத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக சினிமா துறையில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என இழிவுபடுத்தி பேசி இருந்தார் மீரா மிதுன்.
மீரா மிதுனின் இந்தப் பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் பல்வேறு காவல் நிலையங்களில் மீரா மிதுன் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் கொடுத்தனர்.
சென்னையில் வன்னி அரசு கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்யத் தூண்டுதல், ஜாதி மதம் குறித்து பேசி கலகத்தை உருவாக்குதல் என ஜாமீனில் வெளிவர முடியாத 7 பிரிவுகளில் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மீரா மிதுன் தலைமறைவானார். நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தினமும் 20 மாத்திரைகள் எடுத்து வருவதால் தமது உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடும் அதிகளவில் உள்ளதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் விசாரணையை எதிர் கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கை ரத்து செய்யக்கோரி விசாரணை நீதிமன்றத்தில் தான் மனுத் தாக்கல் செய்ய முடியும் எனக் கூறி மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications