ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய மனுதாரருக்கு ரூ. 50000 அபராதம் விதித்த ஹைகோர்ட்.. வழக்கும் தள்ளுபடி
சென்னை: ஊரடங்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இமானுவேல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,''கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் என்று கூறி கடந்த மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை படிப்படியாக நீட்டித்து, தற்போது வரும் 31ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வருவாய் இழந்து வறுமையில் உள்ளனர். குறிப்பாக குறைவான வருவாய் பெறுவோர், கடுமையான சிரமத்தில் உள்ளோம். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்தது. ஆனால், தென்கொரியா, சுவீடன் போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவிக்காமல், வைரஸ் தொற்று பரவாமல் தடுத்தது.

எனவே, உலகில் இந்த வைரசுக்கு எதிராக இரு விதமான நடவடிக்கைகளை நாடுகள் எடுக்கின்றனர். மேலும், கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் வரை அது நம்முடன் தான் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. இதை கடை பிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். எனவே, ஊரடங்கை நீட்டித்து கடந்த 17ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது ..அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அளவில் ஒரு திட்டம் இருக்க வேண்டும், அதே போல மாவட்ட அளவில் ஒரு திட்டம் இருக்க வேண்டும் அதற்காக தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் இதுபோல் எந்த ஒரு திட்டமும் இல்லை என்று வாதிட்டார்..
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே இதுபோல் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும், மனுதார்ர் அரசியல் கட்சியைச்சார்ந்தவர் என்றும் எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications