கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு போதுமான வசதிகள்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைக் கைதிகளை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறைத்துறை டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்களின் வசதிக்காக புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் மூலம் வழக்கறிஞர்கள் கைதிகளை சந்திக்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புழல் சிறையில் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த வசதிகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கவும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து தேவையான பரிந்துரைகளை மேற்கோள்ளவும் வழக்கறிஞர்கள் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆஜரான அதன் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் , சிறையில் கைதிகளை சந்திக்க அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு இன்னும் அகற்றப்படவில்லை என கூறினார் .
இதையடுத்து, சிறையில் ஆய்வு செய்து பரந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பார் கவுன்சில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோஷியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் பிரதிநிதிகளை கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications