லியோவுக்கு அடுத்த சிக்கல்? ஐகோர்ட் மதுரை கிளை பரபர உத்தரவு! ரசிகர்கள் சோகம்! நேரமே நல்லா இல்ல போலயே
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வியாழக்கிழமை வெளியாகும் லியோ படம் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதற்கிடையே இது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை மற்றொரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் பெரும் பொருட்செலவில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அதேநேரம் லியோ படத்திற்குச் சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஏற்கனவே லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதுவே விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
லியோ: அதேபோல லியோ டிரைலர் வெளியான போதும், அதில் விஜய் பேசிய குறிப்பிட்ட ஒரு வசனம் சர்ச்சையானது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இது இருந்ததாகப் பலரும் சாடினர். அடுத்து லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கூடுதல் காட்சிகளைத் திரையிட அனுமதி அளிக்கப்பட்டாலும் கூட, முதல் காட்சி 9 மணிக்குத் தான் இருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
அண்டை மாநிலங்களில் எல்லாம் அதிகாலை காட்சி திரையிடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 9 மணிக்குத்தான் முதல் காட்சி என்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். அதிகாலையில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பாளர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே இப்போது லியோ படத்திற்கு அடுத்து ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது.
வழக்கு: அதாவது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில் அவர், "நான் வசிக்கும் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் லியோ திரைப்படத்திற்காக தியேட்டர் முன்பு மிக உயரமான, நீளமான விளம்பர பதாகை, கட்அவுட் (பிளக்ஸ்) வைக்கப்படுகிறது. இந்த கட் அவுட்களாலும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கப்படும் வெடிகளாலும் போக்குவரத்து நெரிசல் எனப் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது.
இங்கே ஏற்கனவே புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. மேலும், பள்ளி, கல்லூரி வாகனங்கள், வேலைக்குச் செல்வோர் என அனைவரும் இந்த சாலையைப் பயன்படுத்தும் நிலையில், இங்கு அமைந்துள்ள ராட்சத பதாகைகள் மற்றும் கட்அவுட்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது. மேலும் இப்பகுதியில் இருக்கும் தியேட்டர்களில் பார்கிங் வசதி இருந்தும், வாகனங்களைச் சாலையில் நிறுத்துகிறார்கள். இதுவும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
கோரிக்கை: ஏற்கனவே கடந்த காலங்களில் கட்சி மற்றும் சினிமா சார்ந்து வைக்கப்பட்ட கட் அவுட், விளம்பர பதாகையால் விபத்துகள் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்ந்துள்ளன, எனவே லியோ திரைப்படத்திற்கு வைக்கப்படும் ராட்சத விளம்பர பதாகை, கட் அவுட் மற்றும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கப்படும் வெடி பொருட்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தியேட்டர்கள் முன்பு ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க எந்த அனுமதியும் தரவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், அப்போது குறுக்கிட்ட மனுதாரர், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தடை விதிக்க வேண்டும்: அப்போது திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனுமதி இன்றி லியோ படத்தின் பேனர்களை வைக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications