தமிழில் குடமுழுக்கு:'கடவுள் உள்ளூர் மொழியை புரிந்துகொள்ளாது எனகூற முடியாது'-தனிக்குழு அமைக்க உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாகத் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதில் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனைத் தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த வேண்டும் என்றும் இது குறித்து கோயில் உதவி ஆணையருக்கு மனு அளித்தும் பதில் அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், முற்றிலும் சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு நடக்கவுள்ளதாகவும் ஆகம விதிகளின்படி தேவாரம் திருவாசகம் ஓத உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

உலகிலேயே பழமையான மொழி
இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "உலகிலேயே தமிழ் தான் பழமையான மொழி என்பதற்குப் பல ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன. கொடுமணல், சிவகளை, கீழடி மற்றும் அழகன் குளம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளிலும் இதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்தன.

கிறிஸ்து பிறப்புக்கு முந்தையது
இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழ் கல்வெட்டுகளே அதிகம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாகப் பானைகளில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள் என்பவை கிறிஸ்து பிறப்புக்கு 450 ஆண்டுகளுக்கு முந்தையது. இவை அனைத்தும் மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ் பழமையான மொழி என்பதையே காட்டுகிறது. நமது நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் இவை முறையாகப் பாதுகாக்கப்படவில்லை. இதனால் பல தமிழ் கல்வெட்டுகள் சேதமடைந்தன.

உள்ளூர் மொழிகள்
அதேபோல தெய்வங்கள் உள்ளூர் மொழிகளைப் புரிந்து கொள்ளாது என்று யாராலும் கூற முடியாது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏராளமான பக்தி இலக்கியங்களைத் தமிழில் படைத்துள்ளனர். அப்பர் தொடங்கி சம்பந்தர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் தமிழ்நாட்டில் பக்தி இயக்கங்களையே வளர்த்துள்ளனர். இவர்கள் சிவனைப் புழந்து ஏராளமான தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் 12 நாயன்மார்கள் தமிழ்நாடு முழுக்க ஏராளமான சிவாலயங்களைக் கட்டியுள்ளனர்.

தமிழ் அறிஞர்களைக் கொண்ட குழு
இந்த வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு அந்த குறிப்பிட்ட கோயிலுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும். அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழு நடத்த ஏதுவாக நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், சித்தர்கள் ஆகியோர் இயற்றிய பழமையான துதிப்பாடல்களைக் கண்டறிந்து தொழுதிடும் வகையில், தமிழ் அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்களைக் கொண்ட குழுவைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

தமிழில் குடமுழுக்கு
இந்த குழு துறை சார்ந்த வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை செய்து தேவையான அறிக்கையைத் தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டும். கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தும் முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றார் போலத் தமிழ் அறிஞர்களைக் கொண்ட குழுவை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும். அதேபோல பழமையான தமிழ் துதிப்பாடல்கள் எதுவும் கண்டறியப்பட்டால், அவற்றையும் சேர்த்து குடமுழுக்கு விழாவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications