சாட்டை துரைமுருகனுக்கு பணம் குவிகிறது.. எதை வேண்டுமானாலும் யூடியூப்பில் பேசலாமா? ஹைகோர்ட் கேள்வி
மதுரை: பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது தான். அதை வரம்பு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பேச்சு சுதந்திரம் வரம்பு மீறுவதை ஏற்க முடியாது. யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? என்று சாட்டை துரைமுருகன் முன் ஜாமீன் கோரிய வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், முன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசும் போது ஆதிதிராவிட சமூக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக என் மீது திருச்சி போலீஸார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, பட்டியல் இனத்தவருக்கு எதிராக பொது மேடையில் பேசியதாக மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல அவர், பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து அவதூறான கருத்துகளை பேசி வருகிறார். ஏற்கனவே ஒரு வழக்கில் ஜாமீன் பெறும்போது, இனி இதுபோல அவதூறு கருத்துகளை தெரிவிக்க மாட்டேன் என ஐகோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதை இப்போது மீறி உள்ளார் என வாதாடினார்.
இதை பதிவு செய்த நீதிபதி, அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் இதுபோல பேசினால் என்ன மாதிரியான விளைவு ஏற்படும் என்பது மனுதாரருக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார். பின்னர் கருத்து வேறுபாடுகளை நாகரிகமான முறையில் எதிர்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் பேசி யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்தால் அதற்கு பார்வையாளரும் அதிகரிக்கிறது, பணமும் வந்து குவிகிறது.
யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக மனுதாரர் பதிவிட்டுள்ளார். இனி சர்ச்சைக்குரிய வகையில் பேச மாட்டேன் என மனுதாரர் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. வரம்பு மீறி பேசக்கூடாது என நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து, சாட்டை துரைமுருகன் தரப்பில் உத்திரவாத பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் கீழ்கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications