அமர் பிரசாத் ரெட்டி போட்ட பெட்டிஷன்.. இடைக்கால நிவாரணம் அளிக்க மறுத்த ஐகோர்ட்.. பரபர!
சென்னை: பாஜக பெண் நிர்வாகியை தாக்கியதாக பதிவு செயப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை இடைக்கால நிவாரணம் அளிக்கவும் ஐகோர்ட் மறுத்துள்ளது.
சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டாள், பாஜகவில் மாவட்ட பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த ஜனவரி 19ஆம் தேதி பிரதமர் மோடி, சென்னை வந்தபோது சித்ரா நகரில் இருந்து ஆட்களை அழைத்து வருவது சம்பந்தமாக ஆண்டாளுக்கும், நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் கார் டிரைவர் ஸ்ரீதர், பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த தேவி மற்றும் அவரது தங்கை ஆண்டாள் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

மேலும், அமர் பிரசாத் ரெட்டியிடம் இருந்து நீங்கள் வாங்கி வந்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்டதுடன் இதனை வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றதாகத் தெரிகிறது. மேலும் அடிக்கும் போது அமர் பிரசாத் ரெட்டி தான் உங்களை அடிக்க சொன்னார் என்றும் சொல்லி அடித்துள்ளனர். இந்த தாக்குதலில் தேவி காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் பாஜக நிர்வாகி நிவேதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாஜக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர், பாஜக நிர்வாகிகள் நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகிய 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிறை சென்று, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் அமர் பிரசாத் ரெட்டி. இந்நிலையில், இந்த வழக்கில் போலீசார் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை கைது செய்ய தனிப்படை அமைத்தனர்.
இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டி, பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அரசியல் உள்நோக்கத்துடன், தனக்கு எதிரான புகாரில் விசாரணையே இன்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அமர் பிரசாத் ரெட்டி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும், தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவரது முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு (பிப்ரவரி 7) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் மற்றொரு நபர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவுடன் சேர்த்து அமர் பிரசாத் ரெட்டியின் முன் ஜாமீன் மனுவும் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அதுவரை அமர் பிரசாத் ரெட்டிக்கு இடைக்கால நிவாரணம் கோரப்பட்டது. அமர் பிரசாத் ரெட்டிக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications