திடீர் ட்விஸ்ட்! ஓபிஎஸ்ஸுக்கு பெரிய ‘செக்’.. சொத்துக்குவிப்பு வழக்கை தூசு தட்டும் சென்னை ஐகோர்ட்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ஓபி ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்ததாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்திருந்தது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கடந்த 2012ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூ-மோட்டோ) வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நாளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது ஐகோர்ட். அதைத்தொடர்ந்து தற்போது ஓபிஎஸ் மீதான வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications