ஜூஸ் பவுடர் பாக்கெட்டில் ரூ.23.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா.. சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய குருவி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 23.5 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து குளிர்பான பவுடர் பாக்கெட்டில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் உள்பட அவர்கள் மூவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கடத்தல் குருவிகளாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னை வரும் பயணிகள் விமானங்களில், அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் இன்று சென்னை விமான நிலையம் வந்தது.
அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த சிலரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, அவர்களிடம் 24 குளிர்பான பவுடர் பாக்கெட்டுகள் இருந்துள்ளன. அதை பிரித்து பார்த்தபோது, அதில் உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ கஞ்சா போதைப் பொருள் பொட்டலங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 பேரையும் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தியதில், அவர்கள் கடத்தல் குருவிகள் என தெரியவந்துள்ளது.
அவர்களிடம், சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்த முக்கிய நபர்கள் சென்னையில் எங்கு இருக்கிறார்கள்? எந்த இடத்தில் வைத்து இந்த கஞ்சாவை பெற்றுக் கொள்வார்கள்? என விசாரணை நடத்தி, அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications