"ஓவர்டேக்" செய்கிறாரா ஓபிஎஸ்.. இப்படி ஒரு சிக்கல் இருக்காமே.. என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: இரட்டை இலை முடக்கப்படுமா? அல்லது வழங்கப்படுமா? அப்படியே வழங்கினாலும் யாருக்கு கிடைக்கும்? என்ற பல்வேறு கவலைகள் ரத்தத்தின் ரத்தங்களிடம் சூழ்ந்து வரும்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.. இதில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்பதைவிட, ஓபிஎஸ் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதைதான் பலரும் உற்று கவனித்து வருகிறார்கள்.
இப்போதுவரை அதிமுக விவகாரம் தீரவில்லை.. கோர்ட் தீர்ப்பும் வரவில்லை.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்வதில் பிடிவாதம் காட்டி வருவதாக தெரிகிறது.
'கூட்டணியை முடிவு செய்வேன், எடப்பாடிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கட்டும், இரட்டை இலை சின்னம் முடங்காது,. மாறாக எனக்குதான் சின்னம் கிடைக்கும்' என்று ஓபிஎஸ்ஸும் பரபரப்பை கூட்டியிருந்தார்.
‛தீயசக்தி’களை வேரோடு ஒழிப்போம்.. சூளுரைத்த எடப்பாடி பழனிச்சாமி.. பரபரத்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா!
பவர்புல்
ஒருவேளை, இரட்டை இலை கிடைக்காவிட்டால், அதை எடப்பாடி பழனிசாமி வழக்கமான துணிவுடன் ஏற்றுக்கொண்டாலும், அவருடன் இருக்கும் மற்ற தலைவர்கள் 'இலை' இல்லாத அதிமுகவை ஏற்பார்களா? என்பது தெரியவில்லை.. அதேசமயம், இரட்டை இலை இல்லாமல், அதிமுகவின் கட்சி அடையாளம் இல்லாமல் அவரால் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நிச்சயம் தைரியம் வராது என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, இலையை யாருக்கு வேண்டுமானாலும் தரக்கூடிய பவர், பாஜகவுக்கு இருக்கவே செய்கிறது, அத்துடன் இலையை முடக்கக்கூடிய வலிமையும் பாஜகவுக்கு இருக்கிறது என்றும் அரசியல் ஆலோசகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.
இலை லீடர்
கடந்த 1989-லும், 2017-லும் இரட்டை இலை முடங்கியது.. ஆனாலும் அந்தந்த நேரத்தில் நடந்த தேர்தல்களில் அவ்வளவாக பாதிப்புகள் ஏற்படுத்தவில்லை.. இப்போது அப்படி இல்லை.. இலை யாருக்கோ அவர்களே 'தலை' என்று கணிக்கும் நிலைமை வந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பாக உருவாகி உள்ளது... இப்படிப்பட்ட சூழலில்தான், விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. பிரதான எதிர்க்கட்சி என்பதால், இதில் அதிமுகவும் போட்டியிட நேர்ந்துள்ளது..
அதிருப்தி
ஆனால் எந்த சின்னத்தில் போட்டியிட நேரும் என்று தெரியவில்லை.. ஒருவேளை சின்னம் முடக்கப்பட்டுவிட்டால், அதையே காரணம் காட்டி, கூட்டணியிலிருந்து வெளியேறிவிடலாம் அல்லது சிறுபான்மையினரிடம் உள்ள பாஜக அதிருப்தி ஓட்டுக்களையும் அறுவடை செய்து கொள்ளலாம் என்று எடப்பாடி தரப்பு கணக்கு போடும் என்கிறார்கள். அல்லது வேறு வேறு சின்னத்தில் போட்டியிட நேர்ந்தால், மக்கள் செல்வாக்கு இல்லாத ஓபிஎஸ்ஸை எளிதில் தோற்கடிக்கலாம் என்றும் எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம். இதுஒருபக்கம் இப்படி இருந்தால், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி
தொண்டர்களை மாவட்ட ரீதியாக ஓபிஎஸ் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.. மேலும், மாவட்ட செயலாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை தமிழகம் முழுவதும் ஓபிஎஸ், தன்னுடைய நிர்வாகிகளை நியமித்து அதிரடி கிளப்பி வருகிறார்.. ஆதரவாளர்களிடம் ஆலோசனை உட்பட அனைத்தையுமே அதிமுகவின் சார்பிலேயே செய்து வரும்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் சந்திக்க முனைப்பு காட்டுவதாக சொல்கிறார்கள். தமாகா வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்த யோசித்து வருவதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், ஓபிஎஸ்ஸும் தன் பங்குக்கு வேட்பாளரை நிறுத்தலாம் என்கிறார்கள்.
குத்திய முத்திரை
ஆனால், அப்படி தன் சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலும் அவருக்கும் "அதிமுக" வேட்பாளர் என்ற முத்திரையே குத்தப்படும் நிலைமை உள்ளது. அப்படியானால் "2 அதிமுக" தேர்தலில் போட்டியிட நேருமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், இது எடப்பாடி தரப்புக்கு டென்ஷனையும் சிக்கலையும் ஏற்படுத்தி வருகிறதாம். ஒருவேளை, தனித்தனி வேட்பாளர்களை இரு தரப்பிலும் நிறுத்தினாலும், இதன்மூலம் ஓபிஎஸ் - எடப்பாடி இவர்களின் நிஜபலம் என்ன என்பது களத்தில் தெரியக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.. ஆகமொத்தம், எம்பி தேர்தலுக்கு முன்பேயே, ஈரோடு கிழக்கு மிகுந்த எதிர்பார்ப்பை கிளறி விட்டு வருகிறது.