அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன? - அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த விளக்கம்!
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "46,931 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.38,600 கோடி மதிப்புள்ள 14 புதிய முதலீடுகளுக்கு இன்றைய தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அண்மையில் தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம் இது. இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் போது, ஈர்க்கப்பட்ட முதலீடுகல், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பின்னர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "தோல் அல்லாத காலணிகள் தயாரிப்பு, பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் 14 முதலீடுகள் வந்துள்ளன. ரூ.9000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.10,325 கோடி முதலீட்டில் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளன. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முதலீடுகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் மூலம் சுமார் 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்றைய அமைச்சரவை ரூ.38,698.80 கோடி முதலீட்டிற்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மின்னணு துறை சார்ந்த பிரின்டட் சர்க்யூட் போர்டுகள் (PCB), குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல் ஃபோன் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, வாகனங்கள் சார்ந்த உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள், மருத்துவத் துறை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்துபொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா உற்பத்தி. மின்வாகனங்கள் மற்றும் தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் குறித்த ஆராய்ச்சி & மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் அமைந்துள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (ரூ.9000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 5000 நபர்கள்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (ரூ.13180 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 14000 நபர்கள்), தூத்துக்குடி, விருதுநகர். திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் PSG குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கீரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (ரூ.10375 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 3000 நபர்கள்),
அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1000 கோடி முதலீடு. வேலைவாய்ப்பு 15000 நபர்கள்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1395 கோடி முதலீடு. வேலைவாய்ப்பு 1033 நபர்கள்), கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ.612.60 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1200 நபர்கள்) ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீட்டுத் திட்டங்கள்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications