ஹிந்தியில் கிளாஸா?.. கேள்வி கேட்ட ஒரே நாளில் இந்தி திணிப்பை முறியடித்த சு.வெங்கடேசன் எம்பி!
: இந்தி திணிப்பு முறியடிப்புக்கு வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்
சென்னை: ஆங்கிலத்திலும் ரயில்வே மருத்துவமனை தகவல் அமைப்பு பயிற்சியை நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்று அதற்கான அட்டவணை வெளியிட்டுள்ளதற்காக, ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.. அத்துடன், ரயில்வே பயிற்சி வகுப்புகளில் தாய்மொழி வழி பயிற்சியை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் வெங்கடேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி திணிப்புக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் எப்போதுமே உறுதுணையாக இருந்து வருபவர் எம்பி வெங்கடேசன்.. தமிழக உரிமை மற்றும் நலன்களுக்கு, மத்திய அரசால் ஒரு பிரச்சனை, ஆபத்து என்றால் முதல் ஆளாக நின்று கண்டித்து அதற்குரிய மாற்று நடவடிக்கையை வலியுறுத்துவர் வெங்கடேசன்.
அப்படித்தான் நேற்றைய தினம் மத்திய அரசுக்கு ஒரு பிரச்சனையை எழுப்பியிருந்தார்.. அதுசம்பந்தமாக, ரயில்வே அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

மருத்துவமனை
"அதில் ரயில்வே மருத்துவமனைகளில் புதிய நிர்வாக தகவல் அமைப்பு முறை அமல்படுத்துவதற்காக, அதன்மீது மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்த பயிற்சி, அக்டோபர் 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை இணையவழி நடைபெறுகிறது. இதில் பயிற்று மொழியாக இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள ஊழியர்கள் ஒன்றும் புரியாமல் தவிக்கிறார்கள்.

இந்தி
எனவே, இந்த பயிற்சியை இந்தியில் மட்டும் நடத்துவதை கண்டிக்கிறேன். அதனை தமிழிலும் அதைப்போன்று இந்தி இல்லாத மொழிகளிலும் நடத்த வேண்டும். அதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை என்றால் குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் தனியாக இணையவழி வகுப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

மருத்துவமனை
வெங்கடேசனின் இந்த கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்பட்டுள்ளது.. அதன்படி ஆங்கிலத்திலும் ரயில்வே மருத்துவமனை தகவல் அமைப்பு பயிற்சியை நடத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று அதற்கான அட்டவணையையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.. ஒரே நாளில் தன் வேண்டுகோளை பரிசீலித்த ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அதுகுறித்து ஒரு அறிக்கையையும் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

இணையவழி பயிற்சிகள்
"ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சிகள் இந்தியில் மட்டும் நடத்த அறிவிக்கப்பட்டு கடந்த இருபத்தி ஒன்றாம் தேதியில் இருந்து நடைபெற்று வந்தது. இதை விமர்சித்து இந்தி பேசாத மாநில ஊழியர்கள் வசதிக்காக அவரவர் தாய்மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இணையவழி பயிற்சி தனியாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். அதுவரை இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இப்பயிற்சிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்தேன்.

அட்டவணை
எனது கோரிக்கையை ஏற்று இப்போது 25 ஆம் தேதியில் இருந்து ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்க ரயில்வே நிர்வாகம் அட்டவணையை வெளியிட்டுள்ளது.. அதன் நகல் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது. 21 ஆம் தேதி முதல் இந்தியில் நடந்த பாடத்தை 25ம் தேதி ஆங்கிலத்தில் நடத்திட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நவம்பர் இரண்டாம் தேதி வரை பயிற்சி அளிக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
அதன்படி காலையில் இந்தி பேசுபவர்களுக்கு இந்தியிலும், மாலையில் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும் வகுப்பு நடைபெறும். இது இந்தி பேசாத மாநில ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்தப் பிரச்சினையை என் கவனத்திற்கு கொண்டு வந்த ரயில்வே மருத்துவ ஊழியர்களையும், டி ஆர் இ யூ (DREU) தொழிற்சங்கத் தோழர்களையும் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் பயிற்சிகளை அவரவர் தாய் மொழியிலும் நடத்த வேண்டும் என்கிற என் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications