சிவகாசியிலும் இந்தி பெயர்ப்பலகை! “நோய்த்தொற்றைப் போல பரவும் இந்த இந்தித் திணிப்பு!” - கனிமொழி சாடல்
சென்னை: ரயில் நிலையங்களில் இந்தி திணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஏற்கனவே சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சிவகாசி ரயில் நிலையத்திலும் இந்தி திணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், நோய் தொற்றை போல இது பரவுவதாகவும் திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல அமைச்சர் தங்கம் தென்னரசு, "சிவகாசி ரயில் நிலையப் பெயர்ப்பலகையில், தமிழைப் பின்னுக்குத் தள்ளி இந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தென்னக ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழே முன்னவள் ! மூத்தவள்! முதன்மையானவள்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications