நாளை சரண்டர் ஆகிடுறேன்.. ஓம்கார் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு! சென்னையில் கைது செய்த கோவை போலீஸ்!
சென்னை: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபாலின் நாக்கை அறுத்துவிடுவேன் என பேசிய ஓம்கார் பாலாஜியை சென்னையில் வைத்து கோவை போலீசார் கைது செய்துள்ளனர். முன்ஜாமின் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் உள்ள ஈஷா மையம் குறித்தும், அந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால், ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ஓம்கார் பாலாஜி, நக்கீரன் இதழ் குறித்தும், நக்கீரன் ஆசிரியர் குறித்தும் ஆவேசமாகப் பேசியிருந்தார். நக்கீரன் கோபாலின் நாக்கை அறுத்துவிடுவேன் என்றெல்லாம் ஓம்கார் பாலாஜி பேசி இருந்த நிலையில், அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், தன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யுமாறு ஓம்கார் பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஓம்கார் பாலாஜி, புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தாமாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நாளை காலை கோவையில் சரணடைந்து விடுகிறேன். நான் சரணடைய கால அவகாசம் வேண்டும். போலீசார் பின்தொடர்ந்து வருகிறார்கள் என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்து மக்கள் கட்சி ஓம்கார் பாலாஜி சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு நீதிபதி, எந்த ஒரு இடைக்கால உத்தரவும் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை போலீசாரால், சென்னையில் கைது செய்யப்பட்ட ஓம்கார் பாலாஜி கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications